வணக்கம்
பன்முகத் திறன் கொண்ட திரு. ஆனந்த கண்ணன் இன்று இயற்கை எய்தினார் என்கிற செய்தி நம்மையெல்லாம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வெறும் மேடைக் கலைஞராக இல்லாமல் நம் கிராமியக் கலைகளை மக்களிடம் கொண்டு சென்றதோடு மொழிக்கும் அவர் ஆற்றிய பணி நினைவில் கொள்ளத்தக்கது. எங்கள் உலகத் தமிழ்க்கல்விக் கழகத்தில் தமிழ்க் கற்பித்தலில் மாணவர்களுக்கு புரியும் வகையில் , விளையாட்டாக , சுவாரசியமாக கதை வழி, மொழி கற்பித்தல் பயிற்சிப் பட்டறையை எங்கள் ஆசிரியர்களுக்கு நடத்தினார். கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களும் இது ஒரு மிகச் சிறப்பான பயிற்சி மட்டுமல்லாது இந்த யுத்தியை நாங்களும் எங்கள் வகுப்பில் பயன்படுத்தி மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பிக்கிறோம் . மாணவர்களும் ஆர்வத்தோடு கற்கிறார்கள் என்றார்கள் எங்கள் பள்ளி ஆசிரியர்கள். எங்கள் பள்ளி நடத்திய புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு ஒரு பிரபலமானவர் என்பதை எங்கேயும் காட்டாமல் மிக எளிமையாகப் பங்காற்றியதை மறக்கவியலாது. மேடையில் ஏற தயக்கம், பயம் கொண்டவர்களையும் மேடையிலேற்றி நடிக்க வைத்து அதன் வழியே தமிழை எளிமையாக கற்றுக்கொடுப்பதில் கை தேர்ந்தவர். எப்பொழுதுமே புன்னகை தவழும் முகத்தோடுதான் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவார். பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கு பதில்களை சுவாரசியமாக வழங்குவதிலும், பங்கேற்பவர்களி்ன் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் உள்வாங்கி பயிற்சியை மேம்படுத்துவதிலும் திறமையாளர். நண்பர்களையும் குடுப்பத்தையும் மதித்து போற்றுபவர். ஆனந்த கண்ணனின் AKT நிறுவனம் மூலம் அவர் உருவாக்கிய காணொளிகளை எங்கள் ஆரம்பநிலை மற்றும் அனைத்து உரையாடல் வகுப்பிற்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். இந்த இக்கட்டான தருணத்தில் அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையத் தர வேண்டிக் கொள்கிறோம். ஆனந்த கண்ணன் இன்று மறைந்தாலும் அவரின் தமிழ்ப் பணி என்றும் நினைவில் கொள்ளப்படும். அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறோம். அறங்காவலர் குழு, ஆசிரியர்கள், அலுவலர்கள், தொண்டூழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்
